தேமுதிகவின் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா ” டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் குருபூஜை சென்னையில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 9ம் தேதி கடலூரில் மக்கள் உரிமைமீட்பு 2.0 கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஆட்சியில் இருப்பவர்கள் திமுக என்பதால், மக்களின் கேள்விகள் அவர்களை நோக்கி தான் எழும். கட்சிகளாக இல்லை, ஆட்சியாளர்களாக மக்களை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் மீது தான் மக்கள் கேள்வி கேட்பார்கள். அதையே தேமுதிக பிரதிபலிக்கிறது” என்றார்.
மேலும், “தேமுதிக தொடர்ந்து மக்களை சந்தித்து வருவதால்தான், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் சுமார் 50 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது. இன்னும் இருக்கும் நான்கு மாதங்களில் மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது” என கூறினார். தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு, “எம்.ஜி.ஆர் ஒரு காலம். கேப்டன் விஜயகாந்த் ஒரு காலம். அவர்களுக்கு மாற்றாக யாருமே இல்லை. விஜய், கேப்டனை முன்வைத்து பேசுகிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
அவர் தொடர்ந்து பேசியபோது, “ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. ஆனால் கூட்டணியில்லாமல் களத்தில் நிற்க முடியும் என்பதை நிரூபித்தவர் விஜயகாந்த். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்பது பொதுக் கருத்து. அந்த கூட்டணி அமைச்சரவையில் தேமுதிக அங்கம் வகிக்கும். அதற்கான வாய்ப்பு அதிகம்” என்றார்.
அதிமுக குறித்து பேசுகையில், “அதிமுக எங்களை ஏமாற்றவில்லை. ஆனால் ஒப்பந்தத்தில் வருடம் குறிப்பிடப்படவில்லை. அதிமுகவில் இப்படிப்பட்ட வழக்கம் முன்பே இல்லை. கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சிக்கே தமிழகத்தில் எதிர்காலம் இருக்கும்” என கூறினார்.
மேலும், “ஒரு எம்.பி இடத்துக்காக கூட்டணி அமைப்பது இல்லை. வரப்போகும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், கழக நிர்வாகிகளும் மக்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்” என அவர் கூறினார்.
Read more: மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



