நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின.
இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரையும் காதலிப்பதாக கூறி ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே, சண்டையால் பிரிந்த பள்ளி மாணவியுடனும் மீண்டும் பிரவீன் பழகியுள்ளார்.
அப்போது பள்ளி மாணவியிடம் பல ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், மீண்டும் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இதற்கிடையே, கல்லூரி மாணவியுடனும் அவர் உல்லாசமாக இருந்த நிலையில், அவர் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், வீட்டிற்கே தெரியாமல், அவரை பிரவீன் திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையே, பள்ளி மாணவிக்கு இரு தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
சிறுமி என்பதால், மருத்துவமனை நிர்வாகம் உடனே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை கர்ப்பமாக்கியது பிரவீன் என்பது தெரியவந்த நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு மாணவிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.



