தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், அவரது மனைவி ரம்யாவுக்கும் (26) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் சுரேஷ், இந்த மர்ம மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினார்.
விசாரணையில், கண்ணன் மாடிப்படியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறியது பொய் என்று தெரியவந்தது. ரம்யாவுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் மூலம் சட்டவிரோதமாகப் பரிசோதனை செய்ய கண்ணன் திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இதற்காக அவர், சேலம் ஓமலூரைச் சேர்ந்த நர்சு சுகன்யா (35) மற்றும் தரகரான வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து, ரம்யாவுக்குப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ரம்யாவுக்கு 3 மாத கர்ப்பம் ஆன நிலையில், வழக்கமாகச் செல்லும் ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்ததில், ரம்யாவுக்குப் பிறக்கப் போவது 3-வது பெண் குழந்தைதான் என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நர்சு சுகன்யா மற்றும் தரகர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து, வீட்டிலேயே ரம்யாவுக்குக் கருக்கலைப்பு செய்யக் கண்ணன் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி கருக்கலைப்பு செய்யப்பட்டபோது, ரம்யாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர்கள், உடனடியாக ரம்யாவைச் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே, கர்ப்பிணி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்துவிட்டதாகக் கூறி நடித்துள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ரம்யா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்து கர்ப்பிணியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, தரகர் வனிதா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் ஏரியூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



