ரத்தத்தில் A, B, AB மற்றும் O போன்ற வெவ்வேறு வகைகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. இவை நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் வெவ்வேறு ரசாயனக் குறிப்பான்களைக் குறிக்கின்றன. பாதுகாப்பான ரத்தமாற்றம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற சூழ்நிலைகளில் ரத்தப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரத்தப் பிரிவின் மூலம் மற்றொரு நோயை கண்டறியலாம் என்பது ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
புதிய ஆராய்ச்சி என்ன கூறியது?
ரத்த வகைக்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வகை இரத்தம் கொண்டவர்கள், அதாவது ‘A’ ரத்த வகை கொண்டவர்களுக்கு, 60 வயதிற்கு முன்பே பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
2022 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, நமது தனித்துவமான உயிரியல் அமைப்பு நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவர்-விஞ்ஞானி மார்க் கிளாட்வின் இதுகுறித்து பேசிய போது “இந்த முக்கியமான மற்றும் ஆச்சரியமான கண்டுபிடிப்பு, ஒரு நபரின் ரத்த வகை உட்பட, பக்கவாதத்திற்கான மாற்ற முடியாத ஆபத்துக் காரணிகள் பற்றிய நமது அறிவை அதிகரிக்கிறது,” என்று கூறினார்.
இந்த ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
ஆராய்ச்சியாளர்கள் சுமார் 17,000 பக்கவாத நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 600,000 பக்கவாதம் இல்லாத கட்டுப்பாட்டாளர்களை உள்ளடக்கிய 48 மரபணு ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், A1 ரத்தத் துணைப் பிரிவுக்குக் காரணமான மரபணுவுக்கும் பக்கவாதத்திற்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன, மேலும் இளம் வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த ஆராய்ச்சி கூறியது.
குறிப்பிட்ட ரத்த வகை மரபணுக்கள் குறித்த இரண்டாவது பகுப்பாய்வில், மற்ற இரத்த வகைகளைக் கொண்ட மக்களுடன் ஒப்பிடும்போது, A மாறுபாட்டிற்கான மரபணுக்களைக் கொண்டவர்களுக்கு 60 வயதிற்கு முன்பே பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 16 சதவீதம் அதிகம் என்று கண்டறியப்பட்டது.
யாருக்கு ஆபத்து குறைவு?
A ரத்த வகை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, O ரத்த வகை கொண்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே, இந்த பிரிவினருக்கு கூடுதல் கண்காணிப்பு அல்லது பரிசோதனைகள் தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். A இரத்த வகை பக்கவாதத்தின் அபாயத்தை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இந்த முறை பங்கேற்பாளர்களிடையே காணப்பட்டதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
ரத்த உறைதல் காரணிகளான தட்டு அணுக்கள் மற்றும் பிற சுற்றும் புரதங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. ஆர்ட்டரிகளில் கொழுப்புப் படிவுகள் சேர்வதால் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், இரத்த உறைதல் தொடர்பான காரணிகளால் அது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வில், வயது வித்தியாசமின்றி, ‘பி’ இரத்த வகை கொண்டவர்களுக்கு, பக்கவாதம் இல்லாதவர்களை விட பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சுமார் 11 சதவீதம் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.



