ஹைதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி வந்துக் கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் அருகே நடந்துள்ளது.
ரயிலின் S5 பெட்டியில் உள்ள சக்கரப் பகுதியில் திடீரென புகை மற்றும் தீப்பொறி வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதே நேரத்தில் சில பயணிகள் தீ வேகமாக பரவுகிறது என அச்சமடைந்து, ரயில் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்த போதே கீழே குதித்துள்ளனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் இருக்க S5 பெட்டியை தனியாக பிரித்து உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்துக்கு “பிரேக் பைண்டிங்” எனப்படும் சக்கரப் பிரேக் சிக்கல் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்கரத்தில் அதிக வெப்பம் உருவாகி புகை மற்றும் தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக சில நேரம் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சுமார் 20 நிமிட தாமதத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் சென்னை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
Read more: 5 வருஷத்தில் வட்டி மட்டும் 2 லட்சத்துக்கு மேல.. ரிஸ்க் இல்லாத முதலீடு..! முழு விவரம் இதோ..



