இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணு, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு, அக்டோபர் 10-ஆம் தேதி உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இருப்பினும், ஒரு வார இடைவெளியிலேயே மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருந்தார்.
வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுவின் உடல்நிலை இன்று மீண்டும் பாதிக்கப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, உடனடியாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவின் உடல்நிலை சீராகி ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



