ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 136 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் அதிகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் குறித்து சுகாதார அமைச்சர் ரோஜர் கம்பா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். நோய் பரவலை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கோ சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 543 பேருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் 32 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான உகாண்டாவிலும் இரண்டு பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காங்கோவில் பரவி வரும் எபோலா, “புண்டிபுக்யோ” வகையைச் சேர்ந்த வைரஸால் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ் இதற்கு முன்பு 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளிலும் பரவியிருந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த புதிய பரவல் காங்கோவில் பதிவாகும் 17வது எபோலா அலை என கூறப்படுகிறது.
நோய் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவ கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எபோலா என்பது மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாக கருதப்படுகிறது. உடல் பலவீனம், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலின் பல பகுதிகளில் ரத்தக்கசிவு போன்ற கடுமையான அறிகுறிகளை இது ஏற்படுத்தும். நேரடியாக உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், பல நாடுகளில் முன்பும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் உலக சுகாதார அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.



