பிரதமரின் சூரிய சக்தி வீடு, இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லாமல் செய்துள்ளது.
மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 19,45,758 வீடுகளின் மேல் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில் தமிழ்நாட்டில் 48,652 வீடுகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2,066 வீடுகளிலும் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 24,35,196 குடும்பங்கள் பயனடைகின்றன.கூடுதலாக, கிராமப்புற வீடுகள் அல்லது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழிப்பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவை ஒரு உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை ஹைட்ரஜனின் விலையைக் குறைப்பதற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சூரிய மின்கலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கும், மொத்த திட்டச் செலவான ரூ 83.19 கோடி மதிப்பிலான ‘பெரோவ்ஸ்கைட் டேன்டெம் சூரிய மின்கலங்களின் மேம்பாடு (கட்டம்-I)’ என்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது.



