பெண்களின் மாதவிடாய் கால ஆரோக்கியத்தை பேணுவதற்காக, சானிட்டரி நாப்கின்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தனது அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளது.
நாப்கின்களின் விலை அதிகமாக இருப்பதால், ஏழை மற்றும் கிராமப்புறப் பெண்கள் துணிகளைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளைப் பின்பற்றுவதாக லட்சுமி ராஜா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ரேஷன் கடைகள் வழியாக அனைவருக்கும் நாப்கின் வழங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருப்பதால், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
அரசு தரப்பு விளக்கத்தின்படி, ஏற்கனவே தமிழகத்தில் பல பிரிவினருக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 முதல் 19 வயது வரையிலான மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
பள்ளி செல்லாத பெண்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இவை இலவசமாக கிடைக்கின்றன. இருப்பினும், இந்தத் திட்டங்கள் அனைத்தும் முறையாகவும் முழுமையாகவும் மக்களைச் சென்றடைவதில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்தனர். அதன்படி, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள் எத்தனை பேர்? பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பெண்கள் எத்தனை பேர்? என்பது குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த நீதிமன்றம், விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.
Read More : இன்னும் இந்த வேலையை முடிக்கலையா..? உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!



