2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தவெக தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது விஜய்க்கு கூடுதல் பலமாக உள்ளது.
தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை ஈரோட்டில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
பிரச்சாரத்திற்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், “தொண்டர்கள் பெரிய கம்பத்தில் ஏறாத வகையில் கம்பத்தை சுற்றி முள் கம்பிகளால் சுற்றி விடப்பட்டு வேலிகள் அமைக்கப்படும். பாதுகாப்பு படையினர் மற்றும் தொண்டர் படையினர் கூடுதல் பாதுகாப்புடன் கூட்டத்தை வழி நடத்துவார்கள்.
விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை. விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்ஐமானாலும் வரலாம். பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் பாதுகாப்புக்காக 14 ஆம்புலன்ஸ், 58 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Read more: உலகின் சிறந்த உணவு வகைகளை கொண்ட டாப் 100 நகரங்கள்! லிஸ்டில் சென்னைக்கு எந்த இடம்?



