தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் மிக முக்கிய நிதி ஆதாரமாக திகழ்வது நகைக்கடன்கள். அவசர தேவை மற்றும் கல்விச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம். இந்நிலையில், தங்கம் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக நகைக்கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளன.
கடன் வழங்குவதில் சிக்கல் தற்போது சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது சரிவை சந்தித்து வருகிறது. இவ்வாறு தங்கத்தின் விலை குறையும் காலங்களில், முன்னதாக வழங்கப்பட்ட கடன் தொகையானது அடகு வைக்கப்பட்ட நகையின் தற்போதைய சந்தை மதிப்பை விட அதிகமாகிவிடுகிறது. இத்தகைய சூழலில், நஷ்டத்தைத் தவிர்க்கும் நோக்கில் வாடிக்கையாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வங்கிகளுக்கு வாராக்கடன் அபாயத்தை உருவாக்குகிறது.
தற்போது பெரும்பாலான வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் நகையின் மொத்த மதிப்பில் 70% முதல் 72% வரை கடனாக வழங்கி வருகின்றன. ஆனால், தங்கம் விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, இந்த வரம்பை குறைக்க நிதி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, இனி வரும் காலங்களில் நகையின் மதிப்பில் 60% முதல் 65% வரை மட்டுமே கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது அதிகக் கடன் பெற்றவர்கள், இப்போது விலை குறையும் போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். மேலும், புதிதாக கடன் வாங்குவோருக்கு தாங்கள் எதிர்பார்க்கும் முழுமையான தொகை கிடைக்காது என்பதால், இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனங்களின் இந்த அதிரடி மாற்றத்தால், வரும் நாட்களில் நகைக்கடன் சந்தையில் பெரும் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.



