தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் புதிய கட்சி நோக்கி நகர்வதும் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவுடனான கூட்டணி மற்றும் புதிய தேர்தல் வியூகங்களுடன் இபிஎஸ் தரப்பு தயாராகி வரும் நிலையில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் வெளியேற்றங்களும் கட்சித் தலைமையைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தன.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், கோவையில் அதிமுகவுக்கு ஒரு உற்சாகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர விசுவாசியும், அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளராக பணியாற்றியவருமான வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவில் இருந்து அதிரடியாக விலகிய சந்திரசேகரை, தங்களது பக்கம் இழுக்க செங்கோட்டையன் தரப்பு தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அவர் விஜய் கட்சியின் பக்கம் சாய்வார் என்றே அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனைவரது கணிப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில், எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் விரித்த வலையில் சிக்காமல், தனது பழைய பாசறையிலேயே சந்திரசேகர் தஞ்சமடைந்தது செங்கோட்டையன் தரப்பிற்குப் பலத்த பின்னடைவாகவும், வேலுமணிக்குக் கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
Read More : பிரபல ரவுடி பீர் பாட்டிலால் அடித்துக் கொலை..!! திருச்செந்தூரில் பெரும் பரபரப்பு..!!



