பாமக கவுரவ தலைவராகவும் ராமதாஸ் ஆதரவாளராகவும் ஜி.கே மணி இருந்து வருகிறார்.. ராமதாஸ் தரப்பில் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்தும் ஜி.கே மணி விளக்கம் அளித்து வருகிறார்.. எனினும் ஜி.கே மணி உள்ளிட்டோர் அன்புமணியை தவறாக வழிநடத்துவதாக அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் தன்னைப் பற்றி ராமதாஸிடம் அவதூறாக பல கருத்துகளை சொன்னதாகவும், இதன் காரணமாக தந்தை மகன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் அன்புமணி தரப்பு கூறுகிறது.. மேலும் ஜி.கே மணியை துரோகி எனவும் அன்புமணி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.. பாமகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து ஜி.கே மணி நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 18-ம் தேதி ஜி.கே மணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கால அவகாசம் வழங்கியும் விளக்கம் அளிக்காததால் ஜி.கே. மணி நீக்கப்பட்டுள்ளார் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்..
முன்னதாக ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியிருந்தார்.. மேலும் “ நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்.. துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



