கனடாவில் இரண்டு வார கால இடைவெளியில் 2 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையிலான சூழ்நிலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று காவல்துறை கூறினாலும், இது இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய சம்பவத்தில், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் இந்திய முனைவர் பட்ட மாணவர் சிவங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய வழக்கில், ஹிமான்ஷி குரானா என்ற இந்தியப் பெண் கொலை செய்யப்பட்டார். இது நெருங்கிய துணையால் நடந்த வன்முறை சம்பவம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
டொராண்டோ வளாகத்திற்கு அருகில் இந்திய முனைவர் பட்ட மாணவர் சுட்டுக் கொலை
டொராண்டோ காவல்துறை செவ்வாயன்று, டொராண்டோ ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகிலுள்ள ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவங்க் அவஸ்தி என்ற இந்திய முனைவர் பட்ட மாணவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார் என்று டொராண்டோ சன் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை வருவதற்குள் சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், விசாரணைக்காக வளாகம் பூட்டப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொலை இந்த ஆண்டின் டொராண்டோவின் 41வது கொலைச் சம்பவமாகும். மேலும், சில நாட்களுக்குள் அந்த நகரத்தில் குற்றச் செயல் காரணமாக ஒரு இந்தியர் உயிரிழந்த இரண்டாவது சம்பவமும் இதுவாகும்.
டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.. அதில் “டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் இந்திய முனைவர் பட்ட மாணவர் திரு. சிவங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
இந்தியப் பெண் கொலை
மற்றொரு தனி சம்பவத்தில், 30 வயதான இந்தியப் பெண்ணான ஹிமான்ஷி குரானா கடந்த வாரம் டொராண்டோவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையால் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டவரின் புகைப்படம், அதே பெயருடைய ஒரு பயனர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட புகைப்படத்துடன் பொருந்தியது. அந்த சுயவிவரத்தில், அவர் தன்னை டொராண்டோவைச் சேர்ந்த ஒரு டிஜிட்டல் படைப்பாளி என்று விவரித்திருந்தார்
கனடிய சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்தக் கொலையை உறுதிப்படுத்தினர் மற்றும் 32 வயதான அப்துல் கஃபூரி மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடுதல் பிடியாணை பிறப்பித்துள்ளனர். டிசம்பர் 19 ஆம் தேதி இரவு ஸ்ட்ராச்சன் அவென்யூ மற்றும் வெலிங்டன் தெரு மேற்குப் பகுதிகளில் காணாமல் போன நபர் குறித்த அழைப்பிற்கு அதிகாரிகள் பதிலளித்ததாகத் தெரிவித்தது. டிசம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில், ஒரு குடியிருப்புக்குள் அந்தப் பெண் சடலமாகக் கிடந்ததை காவல்துறை கண்டறிந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
வெள்ளிக்கிழமை இரவு 10.41 மணிக்கு காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான அழைப்பிற்கு டொராண்டோ காவல்துறை அதிகாரிகள் முதலில் பதிலளித்தனர், அதைத் தொடர்ந்து ஒரு விசாரணை தொடங்கப்பட்டது.
சனிக்கிழமை காலை, “காணாமல் போன அந்தப் பெண் ஒரு குடியிருப்புக்குள் இறந்து கிடந்த நிலையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று திங்களன்று வெளியிடப்பட்ட டொராண்டோ காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த மரணம் ஒரு கொலை என வகைப்படுத்தப்பட்டது, அதன் பிறகு காவல்துறையின் கொலைப் பிரிவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது..



