தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக போக்குவரத்து துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகினர். மக்கள் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதும் இதனால் பாதிக்கப்பட்டது. அரசு தற்காலிக பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வந்தாலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. தற்காலிக டிரைவர்களால் சில இடங்களில் விபத்து நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொங்கல் பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை தள்ளி வைக்கும் படி போக்குவரத்து சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனை ஏற்றுக் கொண்ட சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஜனவரி 19ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக ஜனவரி 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெற இருக்கிறது.