விழுப்புரம் மாவட்டத்தில் பக்தர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. இறைவன்–இறைவியை சூரியன் தொடர்ந்து ஏழு நாட்கள் வழிபடும் அபூர்வ சிறப்புடன் திகழும் இந்த திருத்தலம், கண் நோய்களுக்கு பரிகாரம் தரும் தலமாகவும் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பழமையான கோயில், ஸ்ரீ சத்தியாம்பிகை சமேத நேத்ரோதாரனேஸ்வரர் ஆலயமாக அறியப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற நடுநாட்டு திருத்தலமாக விளங்கும் இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 231வது திருத்தலமாக சிறப்பு பெற்றுள்ளது. சூரிய பகவான் சிவபெருமானை வணங்கி அருள் பெற்ற தலமாகவும் இக்கோயில் போற்றப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்கள், தினமும் காலை வேளையில் சூரியக் கதிர்கள் முதலில் சிவபெருமானின் மீது விழுந்து, பின்னர் அம்பிகையின் மீது படரும் அபூர்வ காட்சி இங்கு காணப்படுகிறது. இந்த அரிய நிகழ்வைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர்.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் மற்றும் ஆறுமுகர் சன்னதிகள் அமைந்துள்ளன. தலமரமாகிய பனைமரங்களும், வில்வ மரங்களும் கோயிலைச் சூழ்ந்து காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாக உள்ளது. அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இப்பகுதி முழுவதும் பனைமரங்கள் நிறைந்த காடாக இருந்ததாகவும், அதனால் இத்தலம் பனையபுரம் என அழைக்கப்பட்டதாகவும் ஐதீகம் கூறுகிறது. இன்றளவும் பனைமரம் இக்கோயிலின் அடையாளமாக விளங்குகிறது.
கோயிலின் பின்புறத்தில், கற்களால் ஆன சிவபெருமானை வழிபட்டதாகவும், பின்னர் லிங்க வடிவில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கல் வடிவ சிவபெருமானைச் சுற்றிலும் பனைமரங்கள் சூழ்ந்திருப்பதும் இத்தலத்தின் அரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.
மேலும், சிபி சக்கரவர்த்தி புறாவைக் காக்க தனது தசையை அறுத்து தானம் செய்த திருத்தலமாகவும் இக்கோயில் புகழ்பெற்றுள்ளது. இதன் காரணமாக, கோயில் வளாகத்தில் இன்றும் ஏராளமான புறாக்கள் காணப்படுகின்றன. கண் நோய்கள் மற்றும் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு பரிகாரம் வேண்டி, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை நாடி வந்து வழிபட்டு வருகின்றனர். ஆன்மீக பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கிணைந்த இந்த திருத்தலம், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக அடையாளமாக திகழ்கிறது.
Read more: 8வது சம்பளக் குழு: ஜனவரி 1-க்குப் பிறகு யாருக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கும்..? – முழு விவரம்..



