இந்தியாவில் இருசக்கர வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 2026 ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ‘ஏபிஎஸ்’ (Anti-lock Braking System – ABS) எனப்படும் நவீன பிரேக்கிங் வசதி இருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 150 சிசி-க்கு மேல் திறன் கொண்ட பைக்குகளுக்கு மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக இருந்தது. ஆனால், புதிய உத்தரவின்படி 125 சிசி-க்கு கீழ் உள்ள பட்ஜெட் ரக ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கும் (L2 வகை வாகனங்கள்) இந்த விதி பொருந்தும். திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் லாக் ஆகி வாகனம் சறுக்கி விழுவதைத் தடுப்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் வாகனத்தின் மீதான கட்டுப்பாடு ஓட்டுநருக்கு முழுமையாக கிடைக்கும் என்பதால், விபத்துகளை கணிசமாக குறைக்க முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் சுமார் 44 சதவீத உயிரிழப்புகள் இருசக்கர வாகனப் பயணிகளுக்கே நேரிடுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் பைக் விபத்துகளால் சுமார் 75,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், ஏபிஎஸ் தொழில்நுட்பம் விபத்துகளை 30 சதவீதம் வரை குறைக்கும் எனப் போக்குவரத்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய விதியுடன் சேர்த்து, வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான 2 ஹெல்மெட்டுகளை உற்பத்தியாளர்களே வழங்க வேண்டும் என்ற உத்தரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மாற்றத்தினால் வாகனங்களின் விலை ஓரளவு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு ஏபிஎஸ் வசதியைச் சேர்க்க சுமார் ரூ.2,500 வரை கூடுதல் செலவாகும் என்பதால், இது நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஹோண்டா, ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி முறையை மாற்ற தொடங்கியுள்ள நிலையில், சிறு உற்பத்தியாளர்களுக்கு இது சவாலாக இருக்கும் என தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : மக்களே இன்றே கடைசி..!! தவறினால் பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காது..!! வெளியான ஷாக்கிங் அறிவிப்பு..!!



