தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த முறை பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே விண்ணை முட்டியிருந்தது. ஆனால், தற்போதைய அறிவிப்பில் ரொக்கப் பணம் இடம்பெறாதது பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவிய நிதி நெருக்கடி காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதே நடைமுறை தொடருமா அல்லது கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
மறுபுறம், தேர்தல் நெருங்கும் வேளையில் அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சியான அதிமுக மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ரூ. 5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை முழுவதும் அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய அரசு தவறிவிட்டது” என்று சாடும் அந்தச் சுவரொட்டிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



