தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நான்கு முனைப் போட்டிகளுடன் சூடுபிடித்துள்ள வேளையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் காங்கிரஸின் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு கட்சியின் மேலிடத்தையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜோதிமணி தனது பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகள் மிகுந்த கவலையை தருகின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே தேர்தல் ஆணையத்திற்கு பூத் ஏஜென்ட் பட்டியலை வழங்க விடாமல் தடுக்கும் அவல நிலை இங்கு நிலவுகிறது. மக்கள் நலப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், வெறும் உட்கட்சி மோதல்கள் மற்றும் தவறான காரணங்களுக்காகவே தமிழக காங்கிரஸ் தினசரி செய்திகளில் அடிபடுவது வேதனையளிக்கிறது” என்று வெளிப்படையாக சாடியுள்ளார். மேலும், கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் மெல்ல மெல்ல நீர்த்துப் போக செய்கிறது.
மேலும், மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ராகுல் காந்தியின் கொள்கை பிடிப்பிற்கு நேர்மாறான பாதையில் மாநிலத் தலைமை செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். “வெறும் கூட்டல்-கழித்தல் அரசியலை மட்டும் செய்து கொண்டு, ஒருசிலரின் சுயநலத்திற்காக பாரம்பரியமிக்க இந்தக் கட்சி அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. காமராசர் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தின் தியாகத்தால் உருவான இந்த அடையாளத்தை தொண்டர்கள் மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது” என கூறியுள்ளார்.
திமுக – அதிமுக – தவெக – நாம் தமிழர் என பலப்பரீட்சை நடக்கவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சி மோதல் மற்றும் ஜோதிமணியின் பகிரங்க விமர்சனம் கூட்டணி வட்டாரத்திலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் களம் காணும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ போன்ற புதிய கட்சிகள் வலுவடைந்து வரும் நிலையில், காங்கிரஸின் இந்த பலவீனம் அதன் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



