பெங்களூருவில் காதலனை வசியம் செய்ய நினைத்த இளம்பெண் ஒருவர், போலி சாமியாரை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகோடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை தீவிரமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை சொல்ல தயங்கிய நிலையில், எப்படியாவது அந்த இளைஞரைத் தனது வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “குடும்பப் பிரச்சனைகள் மற்றும் காதல் சிக்கல்களுக்கு மாந்திரீகம் மூலம் தீர்வு” என வந்த ஒரு விளம்பரத்தை அந்தப் பெண் பார்த்துள்ளார். மாந்திரீகத்தின் மூலம் காதலனை தன் பக்கம் இழுத்துவிடலாம் என தவறாக நம்பிய அவர், அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய சந்திரசேகர் குரு என்ற நபர், தான் ஒரு பெரிய சாமியார் என்றும், பலரது பிரச்சனைகளை தனது பூஜைகள் மூலம் தீர்த்துள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார்.
காதலனை வசியம் செய்ய சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என கூறிய அந்தச் சாமியார், அதற்கான பொருட்கள் வாங்க வேண்டும் எனக்கூறி பலமுறை சிறுக சிறுக பணம் வாங்கியுள்ளார். சாமியாரின் பேச்சை வேதவாக்காக நம்பிய இளம்பெண், இதுவரை சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி ஏமாந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட சாமியார், “காதலனை முழுமையாக மயக்க ஒரு ஸ்பெஷல் பூஜை செய்ய வேண்டும், அதற்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் தேவை” எனக் கேட்டுள்ளார்.
சாமியார் கேட்ட பெரும் தொகையை கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் இவ்வளவு காலம் ஏமாற்றப்படுவதை உணர்ந்து தான் கொடுத்த 2.5 லட்சம் ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தர மறுத்த அந்த போலிச் சாமியார், இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெண், ஆடுகோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : தடாலடி அறிவிப்பு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை..!! அதிமுகவின் மெகா வாக்குறுதி..!!



