இந்திய தொலைக்காட்சி துறை (Television Industry) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 தொலைக்காட்சி சேனல்கள் தங்களது உரிமத்தை (License) மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளன. டிஜிட்டல் தளங்களின் அபார வளர்ச்சி மற்றும் விளம்பர வருவாய் சரிவு போன்ற காரணங்களால், பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) தரவுகளின்படி, ஜியோ ஸ்டார் (JioStar), ஜீ என்டர்டெயின்மென்ட், ஈநாடு டிவி, டிவி டுடே, என்டிடிவி மற்றும் ஏபிபி நெட்வொர்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது சில சேனல் உரிமங்களை திரும்பப் பெற்றுள்ளன. குறிப்பாக, சோனி நிறுவனம் தனது 26 சேனல்களின் டவுன்லிங்கிங் அனுமதியை திரும்பப் பெற்று, தொழில்நுட்ப ரீதியாக அவற்றை மறுசீரமைத்துள்ளது.
இந்த உரிம ஒப்படைப்புகளுக்குப் பின்னால் நிதி நெருக்கடி, நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மாற்றம் மற்றும் மாறிவரும் சந்தை சூழல் போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ‘பே டிவி’ (Pay-TV) எனப்படும் கட்டண தொலைக்காட்சி முறை தற்போது பலமுனை தாக்குதல்களை சந்தித்து வருகிறது.
வசதி படைத்த குடும்பங்கள் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி (OTT) தளங்களுக்கு மாறிவிட்டனர். அதே சமயம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கட்டணமில்லா ‘டிடி ஃப்ரீ டிஷ்’ (DD Free Dish) சேவைக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், 2019-ஆம் நிதியாண்டில் 7.2 கோடியாக இருந்த கட்டண டிடிஎச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2024-ல் 6.2 கோடியாக சரிந்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 5.1 கோடிக்கும் கீழாகக் குறையக்கூடும் என்று கிரிசில் (Crisil) அறிக்கை எச்சரிக்கிறது.
விளம்பர வருவாயை பொறுத்தவரை, 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விளம்பர சந்தை வளர்ச்சி கண்டாலும், தொலைக்காட்சி துறையின் விளம்பர வருவாய் சுமார் 1.5 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டார் நிறுவனம் கலர்ஸ் ஒடியா, எம்டிவி பீட்ஸ் போன்ற சேனல்களின் உரிமத்தை தனது உள்நாட்டு வணிக முடிவுகளுக்காக திரும்பப் பெற்றுள்ளது. ஏபிபி நெட்வொர்க் நிறுவனம் தனது எச்டி (HD) சேனலை அதிக பராமரிப்பு செலவு காரணமாக மூடியுள்ளது. அதேபோல், என்டிடிவி நிறுவனம் தனது குஜராத்தி செய்தி சேனல் தொடங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
டிஜிட்டல் தளங்களுக்கு குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளே உள்ள நிலையில், தொலைக்காட்சி துறைக்கு உரிமம், உள்ளடக்கம் மற்றும் விலை நிர்ணயம் என பல அடுக்கு கட்டுப்பாடுகள் இருப்பது தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக ஒளிபரப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தியாவில் 916 தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 572 இலவச சேனல்களாகவும் (FTA), 334 கட்டண சேனல்களாகவும் உள்ளன. தொழில்நுட்ப மாற்றமும், மக்களின் ரசனையும் மாறிவரும் இந்தச் சூழலில், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை தகவமைத்து கொள்ளப் போராடி வருகின்றன.



