புத்தாண்டு பிறந்தாலே நம் இல்லங்களில் அரங்கேறும் முதல் மாற்றம் பழைய காலண்டர்களை நீக்கிவிட்டு, புதிய காலண்டர்களை மாட்டுவதுதான். நகைக்கடைகள் முதல் மளிகை கடைகள் வரை விதவிதமான சுவாமி படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களை அன்பளிப்பாக வழங்குகின்றன. ஆனால், இந்தப் புதிய காலண்டர்களை எங்கு மாட்ட வேண்டும், பழைய காலண்டர்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது. ஆன்மீக ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் காலண்டர் பராமரிப்பில் நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து இங்கே காண்போம்.
புதிய காலண்டரை மாட்டுவதற்கு கிழக்கு அல்லது வடக்கு திசையே மிகவும் உகந்தது. இந்த திசைகளில் சுவாமி படங்கள் கொண்ட காலண்டர்களை மாட்டுவது குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியையும் தரும் என்பது நம்பிக்கை. மாறாக, தெற்கு திசையை நோக்கி காலண்டர்களை மாட்டுவதை தவிர்க்க வேண்டும்; இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், ஜன்னல் அல்லது கதவு அருகே காற்றோட்டம் அதிகம் உள்ள இடங்களில் காலண்டரை மாட்ட கூடாது. காலண்டர் தாள்கள் எப்போதும் பறந்து கொண்டே இருப்பது குடும்ப நிம்மதிக்கு உகந்ததல்ல என்று சொல்லப்படுகிறது.
நம்மில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு, பழைய காலண்டரை அகற்றாமல் அதன் மேலேயே புதிய காலண்டரை மாட்டுவது அல்லது சுவாமி படம் அழகாக இருக்கிறது என்பதற்காக பல பழைய காலண்டர்களை சேர்த்து வைப்பது. “பழைய காலண்டர்கள் வீட்டில் இருந்தால், தேக்கமடைந்த பழைய பிரச்சனைகளும் அங்கேயே தங்கிவிடும்” என்று முன்னோர்கள் எச்சரிக்கின்றனர். இது வீட்டின் முன்னேற்றத்தை தடுப்பதோடு, தேவையற்ற மனக்கவலைகளையும் உண்டாக்கும். எனவே, காலம் முடிந்தவுடன் பழைய காலண்டர்களை அகற்றிவிடுவதுதான் அறிவார்ந்த செயல்.
பழைய காலண்டர்களில் இருக்கும் சுவாமி படங்களை என்ன செய்வது என்ற தயக்கத்தில் பலர் அவற்றை கொண்டு போய் கோயில் மரத்தடிகளில் வைத்துவிடுகின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். நமக்கு தேவையில்லாத பொருட்களை ஆலயத்தில் கொண்டு வைப்பது புண்ணியத்திற்கு பதில் பாவத்தையே சேர்க்கும். மாறாக, காலண்டரில் உள்ள சுவாமி படங்களை மட்டும் தனியாக பிரித்து, அவற்றை நீரில் ஊறவைத்து சிதைத்துவிடலாம். பின்னர் அந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஓடும் நீரில் விடலாம். எக்காரணம் கொண்டும் குப்பைத் தொட்டியில் வீசக்கூடாது.
இன்னொரு முக்கியமான விஷயம், காலண்டர்களை ஒருபோதும் பூஜை அறையில் வைத்துப் படங்கள் போல வழிபட கூடாது. பூஜை அறை என்பது தெய்வ திருவுருவங்களை வணங்குவதற்கான இடமே தவிர, தேதி பார்க்கும் இடமல்ல. எனவே, அழகான படமாக இருந்தாலும் காலண்டரை வரவேற்பறையிலோ அல்லது ஹாலிலோ மாட்டுவதே முறை. சரியான திசையில் காலண்டரை மாற்றி, பழைய தேக்கங்களை அகற்றி, இந்தப் புத்தாண்டில் புதிய மாற்றங்களை வரவேற்போம்.



