டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானம் அருகே உள்ள மசூதி பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நள்ளிரவு பெரும் வன்முறையாக வெடித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 30 புல்டோசர்கள் மற்றும் 50 லாரிகளுடன் அதிகாரிகள் களமிறங்கிய நிலையில், இந்த திடீர் மோதலால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி துர்க்மான் கேட் பகுதியில் உள்ள சையத் பாயிஸ் இலாஹி மசூதி மற்றும் கல்லறைத் தோட்டத்தை ஒட்டியுள்ள சுமார் 38,940 சதுர அடி நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த ஒரு திருமண மண்டபம் மற்றும் மருந்தகத்தை இடிக்கும் பணியில் சுமார் 300 அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசித் தாக்கவே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இந்த மோதலில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து விளக்கமளித்த காவல்துறை அதிகாரி நிதின் வால்சன், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதாலேயே நள்ளிரவில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ ஆதாரங்கள் மூலம் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, 1940-ல் குத்தகைக்கு விடப்பட்ட குறிப்பிட்ட நிலத்தைத் தவிர்த்து, விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Read More : “பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா”..? 34,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! எங்கெங்கு தெரியுமா..?



