தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மெகா பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளச் செங்கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. அத்துடன் தமிழக அரசின் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இந்தப் பரிசுத் தொகுப்புடன் இணைந்து வழங்கப்பட இருப்பது ஏழை, எளிய மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நெரிசலின்றிப் பரிசுப் பொருட்களைப் பெற்றுச் செல்ல ஏதுவாக, ரேஷன் கடைகள் மூலம் ஏற்கனவே வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. எந்தத் தேதியில், எந்த நேரத்தில் கடைக்கு வர வேண்டும் என்ற விவரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று முதல் தகுதியான பயனாளிகளுக்குப் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது. இருப்பினும், இந்தப் பரிசுத் தொகுப்பைப் பெறுவதில் ஒரு முக்கியமான நிபந்தனையை அரசு விதித்துள்ளது. குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் (Active) இருந்தால் மட்டுமே 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் அட்டைகள் முடக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், அவர்கள் தங்களது அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இதற்காகப் பொதுமக்கள் https://www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது குடும்ப அட்டையின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : EPS போட்ட மெகா பிளான்..!! அதிமுகவில் சாரை சாரையாக இணையும் மாற்றுக் கட்சியினர்..!!



