நாடாளுமன்றத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சிகரெட் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி உயர்வு ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தையில் சுமார் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை, புதிய வரி விதிப்பிற்குப் பிறகு சுமார் 72 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.
இந்த அதீத விலை உயர்வு, பொதுமக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் உதவும் என மத்திய அரசு நம்புகிறது. இந்த விலை மாற்றங்கள் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் முன்பே, சந்தையில் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் சில மொத்த வியாபாரிகள் செயல்பட தொடங்கியுள்ளனர். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய ஏஜெண்டுகள், அதிக தேவையுள்ள ‘கிங் சைஸ்’ உள்ளிட்ட உயர்தர சிகரெட் வகைகளைப் பெரிய அளவில் பதுக்கி வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
விற்பனை பிரதிநிதிகள் மூலம் சில்லறை கடைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் சப்ளை தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கையிருப்பு இல்லை என்ற காரணத்தை கூறி, சிறிய கடைகளுக்கு குறைந்த அளவிலான பாக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த செயற்கை தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, 18 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சிகரெட்டுகள் தற்போது சில்லறை கடைகளில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றன. அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பே, பதுக்கல் மற்றும் கூடுதல் விலை வசூலிப்பு போன்ற நடவடிக்கைகளால் புகைப்பிடிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு பிறகு ஏற்படவுள்ள இந்த 4 மடங்கு விலை உயர்வு, புகையிலை சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : “ஆட்சியில் பங்கு.. தொகுதியில் கெடுபிடி”..!! எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்த அமித்ஷாவின் நிபந்தனைகள்..!!



