விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் “ 10 அல்லது 12 மணி நேரத்தில் உத்தரவு வேண்டுமென கேட்பது என்ன நியாயம்? சான்றிதழுக்காக சில காலம் காத்திருக்க முடியாதா? படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியை அறிவித்துவிட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.. இதனால் ஜனவரி 21 வரை ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.. அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக திங்கள் கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முறையீடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த மனு திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் சான்றிதழ் தொடர்பாக மத்திய சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படக்குழு தாக்கல் செய்த மனுவுக்கு இன்று தான் எண்ணிடும் பணி நடந்தது.. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என படக்குழு முறையிட்டுள்ளது.. ஒருவேளை ஜனநயாகன் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரி சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.



