பெண்கள் பணிபுரியும் இடங்களில்கூட பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நட்பு என்ற பெயரில் பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பெண்களின் மனநலனையும், பாதுகாப்பு உணர்வையும் கடுமையாக பாதிக்கின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, கடந்த 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவருடன் வேலை செய்த கோகுல்நாத் (26) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அலுவலகம் சார்பில் நடைபெற்ற விருந்தின்போது, இளம்பெண்ணின் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, தன்னிடம் உல்லாசமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னுடன் உல்லாசமாக இருப்பதை அவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், அந்த நிறுவன வேலையை விட்டு விலகியதுடன், தனது செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இளம்பெண்ணின் புதிய செல்போன் எண்ணை கண்டுபிடித்த கோகுல்நாத், மீண்டும் தொடர்புகொண்டு தனது விருப்பத்திற்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.
மேலும், பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது.? இன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்..!



