தமிழக அரசியல் சதுரங்க வேட்டையில், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய மூவரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் கட்சியின் அரசியல் வலிமையை நிலைநிறுத்தவும், கௌரவமான தொகுதிகளைப் பெறவும் இவர்கள் கடைபிடிக்கும் நிதானமான போக்கு, பெரிய கட்சிகளுக்கு ஒரு மறைமுக அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை ஒரு அரசியல் தாரக மந்திரமாகவே இந்த தலைவர்கள் மாற்றியுள்ளனர். தேமுதிக மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே தை முதல் தேதியன்று தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அதிரடியாக அறிவிக்க போவதாகக் கூறி வந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அதே பாணியில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனக் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
தேமுதிக-வை பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், பிரேமலதா விஜயகாந்த் தங்களுக்குரிய கௌரவமான இடங்களுக்காக இன்னமும் காத்திருக்கும் நிலையிலேயே உள்ளார். அதேபோல், அதிமுக-வின் இரு துருவங்களாக செயல்படும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் கூட்டணி விவகாரத்தில் அவசரப்படாமல் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்த மும்முனை அணுகுமுறையானது தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணிக் கட்டமைப்புகளை சிதைத்து, புதிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தை முதல் நாளான இன்று, இந்த தலைவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய புயலை கிளப்பலாம். கூட்டணி கணக்குகள் கைகூடுமா அல்லது புதிய அணிகள் உதயமா என்பது இன்றைக்குள் தெளிவாகிவிடும்.



