நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது..
இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். நேரு அதிமுக – பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரச்சாரம். நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு 2 முறை கடிதம் எழுதி இருந்தது..
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.365.87 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. பணியிட மாறுதலுக்கு ரூ.7 லட்சம் தொடங்கி ரூ.1 கோடி வரை லஞ்சம் கைமாறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாட்ஸ் அப் உரையாடல்கள், புகைப்படங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளன என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.. அதன்படி அதிகாரிகள், பொறியாளர்களை இடமாற்றம் செய்ய ரூ.365.87 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. இது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது..



