தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன..
அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் அமைத்தார்.. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை விஜய் அமைத்துள்ளார்.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.. 2 முறை ஆஜரான அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை மேற்கொண்டனர்.. வரும் பிப்ரவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதில் விஜய் பெயர் கூட இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..
மறுபுறம் விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது.. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. இந்த தீர்ப்பு வந்த உடன் தான் ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியவரும்.. எனினும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சென்சார் போர்டு குறித்தோ அல்லது பாஜக அரசு குறித்தோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் விஜய் மௌனமாக இருந்து வருகிறது.. தனது பிரச்சனைக்கே குரல் கொடுத்தாத விஜய் எப்படி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார் என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்..
இப்படி சிபிஐ விசாரனை, ஜனநாயகன் பட சென்சார் சிக்கலுக்கு மத்தியில் விஜய் தவெக சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.. அதன்படி, தவெக மாநில, மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
தவெக தலைமை நிலைய செயலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



