பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்ட அரசு, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போதைய 8.2 சதவீதத்திலேயே நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இது பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்துள்ள பெற்றோர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற சேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதாயத்தைத் தருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.1 சதவீத வட்டியையும், எஸ்பிஐ (SBI) போன்ற முன்னணி வங்கிகள் தங்களது நிலைத்த வைப்பு நிதிக்கு (FD) இதைவிட குறைவான வட்டியையும் வழங்கி வரும் நிலையில், இத்திட்டத்தின் 8.2 சதவீத வட்டி மிகவும் லாபகரமானது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த அனுமதி என்றாலும், இரட்டை அல்லது மூன்று பெண் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் கூடுதல் கணக்குகளைத் தொடங்கச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் நிதி மேலாண்மை மிகவும் நெகிழ்வானது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் முதலீடு செய்யும் தொகை, அதற்கு ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வு காலத்தில் கிடைக்கும் பெரும் தொகை என மூன்றிற்குமே வருமான வரிச் சட்டம் 80C-இன் கீழ் முழுமையான வரி விலக்கு உண்டு.
குழந்தை 18 வயதை எட்டியதும் மேற்படிப்பு செலவிற்காகப் பகுதித் தொகையையும், 21 வயதில் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் அரசு நிலைநிறுத்தியுள்ளது, நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நீண்ட காலத் திட்டமிடலுக்கு வலு சேர்த்துள்ளது.
Read More : நெசவாளர்களுக்கு மாதம் ரூ.1,200 ஓய்வூதியம் தரும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?



