உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற வெறியில் வாலிபர் ஒருவர் செய்துள்ள விபரீத செயல் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீட் (NEET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காக, 24 வயது இளைஞர் ஒருவரே திட்டமிட்டுத் தனது காலை துண்டித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜான்பூர் மாவட்டம் லைன் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட காலிப்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் என்பவர், மருந்தகவியலில் (D.Pharm) டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு எப்படியாவது மருத்துவம் (MBBS) படிக்க வேண்டும் என்பது நீண்ட கால லட்சியமாக இருந்துள்ளது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, மர்ம நபர்கள் தன்னைத் தாக்கி, தனது இடது காலை துண்டித்துவிட்டுத் தப்பிவிட்டதாகக் கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலை முயற்சி வழக்காகவே காவல்துறையினரால் பார்க்கப்பட்டது.
வழக்கை விசாரித்த போலீசாருக்கு ஆரம்பத்திலேயே பல சந்தேகங்கள் எழுந்தன. சூரஜ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், விசாரணையை திசைதிருப்ப முயன்றார். ஒரு மெஷின் மூலம் கால் மிக துல்லியமாக வெட்டப்பட்டிருந்ததே தவிர, ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் அங்கில்லை. மேலும், சம்பவ இடத்தை சோதனையிட்டபோது சில ஊசி மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. சூரஜ் ஏற்கனவே மருந்தகவியல் படித்தவர் என்பதால், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தமக்குத் தாமே மயக்க மருந்து (Anesthesia) ஊசியைச் செலுத்திக்கொண்டு, வலியே தெரியாமல் மெஷின் மூலம் காலைத் துண்டித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது.
சூரஜின் செல்போன் அழைப்புகள் மற்றும் அவரது டைரியை சோதனையிட்டபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. அந்த டைரியில், “2026-க்குள் எப்படியாவது மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும்” என்பதைத் தனது வாழ்நாள் இலக்காக அவர் எழுதியிருந்தார். இதற்காக முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு (BHU) சென்று போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பின்னரே, சட்டப்பூர்வமாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் (Divyang Certificate) பெற தகுதி உடையவராக மாற, தனது உடல் உறுப்பையே இழக்கும் பயங்கரமான முடிவை அவர் எடுத்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தன்னை யாரும் தாக்கவில்லை என்பதையும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் படிக்கலாம் என்பதற்காகவே இச்செயலைச் செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜின் நிலைமை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, பொய் புகார் அளித்தது மற்றும் அதிகாரிகளைத் திசைதிருப்பியது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி கோல்டி குப்தா தெரிவித்துள்ளார்.



