திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளியான 51 வயது சிவசுப்பிரமணியன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் காலை அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியுடன் நடமாடியது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 25 வயதான ராதாகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. ராதாகிருஷ்ணன் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சிவசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களின் சாதி மறுப்புக் காதலை சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார். இதுவே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
சிவசுப்பிரமணியனின் எச்சரிக்கையால் ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுமியும், காதலன் ராதாகிருஷ்ணனும் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, சிவசுப்பிரமணியன் வீட்டின் வெளியே தனியாக உறங்குவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராதாகிருஷ்ணன், தனது நண்பர்களான சேரன் மற்றும் சிவநேசன் ஆகியோருடன் இணைந்து, தூக்கத்தில் இருந்த சிவசுப்பிரமணியனை இரும்பு கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சதித் திட்டத்திற்கு அந்தச் சிறுமியே மூளையாகச் செயல்பட்டு வழிகாட்டியதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குத் தூண்டுகோலாக இருந்த 15 வயது சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : அப்படிப்போடு..!! விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு..!! ரூ.8,000ஆக உயரும் தொகை..!!



