பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்படுகிறது.” என்று கூறினார்.
மேலும் “ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் வகையில் குடியரசுத் தலைவர் பல விஷயங்களைக் கூறினார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் 2026 ஆம் ஆண்டைக் குறித்தும் குடியரசுத் தலைவர் வெளிப்படுத்திய எதிர்பார்ப்புகளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்..
அரசாங்கத்தின் கவனம் ‘சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற விரைவுப் பாதையில் இந்தியா’ என்பதில் உள்ளது என்றும், இதன் நோக்கம் இந்தியாவை நீண்டகாலப் பிரச்சனைகளிலிருந்து நீண்டகாலத் தீர்வுகளை நோக்கி நகர்த்துவதே என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த அணுகுமுறை உலக அரங்கில் நாட்டிற்கு ஒரு முன்கணிப்புத் தன்மையையும் நிலைத்தன்மையையும் வளர்த்து வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டி, அதை ‘இளைஞர்களின் அடையாளம்’ என்று பிரதமர் மோடி வர்ணித்தார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் மோடி உற்பத்தியாளர்களை வலியுறுத்தினார். “ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு லட்சிய இந்தியாவுக்கானது. அவர்களுக்குத் திறக்கப்படும் புதிய சந்தைகளிலிருந்து பயனடையுமாறு உற்பத்தியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார். மேலும், “ஒரு புதிய சந்தை திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கும் தரமான தயாரிப்புகளை வழங்குங்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையை நண்பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்டு, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கை ஆவணம், 2025-26 (ஏப்ரல்-மார்ச்) ஆம் ஆண்டுக்கான பொருளாதார நிலை மற்றும் பல்வேறு நுண்ணறிவுகளையும், அடுத்த நிதியாண்டுக்கான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.



