நாட்டின் கண்கள் அனைத்தும் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார். வழக்கமாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இல்லை என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வந்தபோதிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் வசதிக்காக பங்குச் சந்தைகளும் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்ப்பது வருமான வரிச் சலுகைகளைத்தான். கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ‘ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்’ (Standard Deduction) தொகையை 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், தம்பதிகள் இணைந்து வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் ‘கப்பிள் டேக்ஸ்’ (Couple Tax) முறை முதன்முதலாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, விண்ணைத் தொடும் தங்கம் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி வரியில் கணிசமான குறைப்பு இருக்குமா என்பதும் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விவசாயத்தைப் பொறுத்தவரை, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு நிதியுதவி 6,000 ரூபாயில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாய் அல்லது 9,000 ரூபாயாக உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ‘பூமித்தாய்’ திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கக் கூடுதல் மானியங்களும், ஊக்கத்தொகைகளும் அறிவிக்கப்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான பிரத்யேக நிதி ஒதுக்கீடு, சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது. குறிப்பாக, ஓசூர் மின்னணு உற்பத்தி மண்டலம் மற்றும் குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவுதளப் பணிகளுக்காக கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அது தென் தமிழகத்தின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் காரணியாக அமையும்.
மறுபுறம், தேர்தல் அரசியல் இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த பட்ஜெட்டில் பீகாருக்குக் கிடைத்தது போன்ற பிரம்மாண்டமான நிதித் தொகுப்பு, இம்முறை கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு கிடைக்கலாம் என தெரிகிறது. கடந்த ஆண்டு உரையின் போது தமிழகத்தின் பெயர் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை நிதியமைச்சர் தமிழகத்திற்கான திட்டங்களை எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



