அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆனால், தேவையான பெரும்பான்மை ஆதரவு இல்லை என்ற காரணத்தால் ஆளுநர் இதுவரை விஜய்க்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த பதவியேற்பு விழாவும் நடைபெறாமல் போனது.
இதற்கிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்க விஜயை ஆளுநர் மீண்டும் அழைத்துள்ளார். மக்கள் பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தேவையான பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், ஆட்சியமைக்கவே முன்கூட்டியே பெரும்பான்மை உறுப்பினர்கள் தேவை என ஆளுநர் வலியுறுத்துவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு ஆளுநரை சந்திக்க உள்ளார். தவெக ஆட்சியமைப்புக்காக போராடி வரும் நேரத்தில் ஆளுநருடனான இபிஎஸ் சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read more: Flash: ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர் தரப்பில் விளக்கம்..



