சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆவணங்களில், தற்போது 79 வயதாகும் டிரம்ப் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க நீதித்துறையோ எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
‘கேலண்டர் கேர்ள்ஸ்’ பார்ட்டிகள்
ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்களின்படி, டிரம்ப் தனது மாரா-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதியில் பல உயர்மட்ட பிரபலங்களுடன் பார்ட்டிகளை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பார்ட்டிகளில் எலான் மஸ்க், டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், மகள் இவாங்கா டிரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாய்வழி பாலியல் உறவு மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள்
ஒரு ஆவணத்தில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில், ஒரு அடையாளம் வெளியிடப்படாத பெண் தனது தோழி குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த தோழி, 13 அல்லது 14 வயதாக இருந்தபோது, அதிபர் டிரம்பால் ஓரல் செக்ஸ் (வாய்வழி பாலியல் உறவு) செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தின் போது, அந்த சிறுமி டிரம்பை கடித்ததாகவும், இதுகுறித்து சிரித்ததற்காக முகத்தில் தாக்கப்பட்டதாகவும் அந்த சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறுமி ஜெஃப்ரி எப்ஸ்டீனாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் கூறியதாக பதிவாகியுள்ளது.
இதேபோல், மற்றொரு ஆவணத்தில் , 13–14 வயதுடைய உள்ள ஒரு இளம்பெண், டிரம்பால் ஓரல் செக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அந்தச் செயலின் போது அவர் டிரம்பை கடித்ததாகவும் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
டாட் பிளாஞ்சின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச், நீதித்துறை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டதாக கூறினார். “இன்றைய ஆவண வெளியீடு, அமெரிக்க மக்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையை வழங்கவும், சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை பின்பற்றவும் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆவண ஆய்வு மற்றும் அடையாளப்படுத்தல் செயல்முறையின் முடிவாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த ஆவணங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். “இந்த ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் தகவல்களை விட, பொதுமக்களுக்கு அதிகமான தகவல் தேவைப்படுவதாக ஒரு தாகம் உள்ளது. அந்த தாகம் முழுமையாக தீரும் என்று நான் நினைக்கவில்லை,” என பிளாஞ்ச் கூறினார்.
சில நபர்களை கூட்டாட்சி அதிகாரிகள் பாதுகாத்தனர் என்ற நீண்டநாள் இணைய ஊகங்களுக்கு பதிலளித்த பிளாஞ்ச், “நாங்கள் அதிபர் டிரம்பை பாதுகாக்கவில்லை. யாரையும் பாதுகாக்கவும் இல்லை; யாரையும் புறக்கணிக்கவும் இல்லை,” என்று கூறினார்.



