மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
வட்டிக்காக மட்டுமே 13.66 லட்சம் கோடி ஒதுக்கீடு :
இந்திய அரசு வாங்கியுள்ள இந்தக் கடன்களுக்காக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை மலைக்க வைப்பதாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வட்டிச் செலவினங்களுக்காக மட்டுமே சுமார் 13.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசின் ஒட்டுமொத்த செலவினத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை ஆகும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய அரசுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வருவாயிலும், சுமார் 25 பைசா வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை வட்டிக்கு செல்வதால், மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் அரசுக்குத் தொடர் சவால்கள் நீடித்து வருகின்றன.
உள்நாட்டுக் கடனால் குறையும் அபாயம் :
நாட்டின் கடன் அளவு அதிகரித்தாலும், அதில் ஒரு நிம்மதியான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் மொத்தக் கடனில் 95 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டு கடனாகவே உள்ளது. அரசுப் பத்திரங்கள் விற்பனை, எல்.ஐ.சி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் மக்களின் பி.எப். சேமிப்புத் திட்டங்கள் மூலமாகவே இந்த நிதி திரட்டப்படுகிறது. வெளிநாட்டு கடன் குறைவாக இருப்பதால், சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு மாறினாலும் இந்தியாவிற்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. மேலும், அரசு செலுத்தும் வட்டித் தொகை இந்தியாவிற்குள்ளேயே சுற்றுக்கு வருவதால், அது மறைமுகமாக உள்நாட்டு பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கிறது.
மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 4.3 சதவீதமாகவும், வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் கடன்-ஜிடிபி விகிதத்தை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநில அரசுகளின் கடன்களையும் சேர்த்தால், இந்தியாவின் மொத்தக் கடன் சுமை 300 லட்சம் கோடி ரூபாயை தொடலாம் எனக் கணிக்கப்படுகிறது. இருப்பினும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் விகிதம் இன்னும் பாதுகாப்பான அளவிலேயே இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உள்கட்டமைப்புத் துறையில் தற்போது செய்யப்படும் பெரும் முதலீடுகள், வரும் காலங்களில் அரசின் வருவாயைப் பெருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



