பிஎம் கிசான் பயனாளிகள் 16-வது தவணைத் தொகையினை பெறுவதற்கு e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ. 53,600 கோடி நிதியாகப் பெற்றுள்ளனர். நடப்பாண்டில் 16-வது தவணையைப் பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாரை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான, கடைசி தேதி 31.01.2024 ஆகும். எனவே , தகுதியுள்ள வேளாண் மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.