பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கணவனைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெகுசராய் மாவட்டத்தின் ரகுநந்தன்பூர் கிராமத்தை சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவரே இந்தச் செயலில் ஈடுபட்டுச் சிக்கியுள்ளார்.
சந்தன் குமார் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் கைக்குழந்தையுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். விசேஷம் முடிந்து திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத ஆதுபூர் வயல்வெளிப் பகுதிக்குத் திட்டமிட்டுத் தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுமன் குமாரியை சுட்டுக் கொன்றார். கொலையைச் செய்துவிட்டுத் தப்பிச் செல்லாமல், ஊர் மக்கள் மீது பழியை போட்டுவிட்டு, போலீசாருக்கு தானே தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மனைவியின் சடலத்தைப் பிடித்துக்கொண்டு சந்தன் குமார் கதறி அழுது நாடகமாடியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.
ஆனால், சம்பவ இடத்தில் போலீசாருக்குச் சந்தன் குமாரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. சுமன் குமாரிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தம்பதிக்குள் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் மனைவி தனது போக்கை மாற்றிக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த சந்தன் குமார், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுத் துப்பாக்கியை வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தன் குமாரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தனது கைக்குழந்தையின் கண் முன்னாலேயே தாயை சுட்டுக்கொன்ற இந்தக் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தன் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.



