சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (40) என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயின்று வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்து 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி மட்டும் பேருந்துக்காக தனியாக காத்திருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட திருநாவுக்கரசு, “உன்னை உன் வீட்டில் விட்டுவிடுகிறேன்” என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும்போதே மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட திருநாவுக்கரசு, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி அதிர்ச்சியடைந்து தட்டிக்கேட்டபோது, “தெரியாமல் பட்டுவிட்டது” என மழுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர் தொடர்ந்து எல்லை மீறியதால் மாணவி பயத்தில் சத்தமிட்டு தன்னை இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். மாணவியின் கூச்சலைக் கேட்டு மக்கள் கூடிவிடுவார்கள் என அஞ்சிய திருநாவுக்கரசு, அவரைப் பாதியிலேயே இறக்கிவிட்டுத் தப்பியோடினார்.
வீடு திரும்பிய மாணவி கண்ணீருடன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூற, அவர்கள் உடனடியாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று அவரை மடக்கிப் பிடித்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More : மெகா வாய்ப்பு..!! மின்சார கார்களுக்கு ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி..!! TATA நிறுவனம் அதிரடி..!!



