தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் ஒரே இடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் நீடிக்கும் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவில், தேர்தல் நடத்தப்படும் மாவட்டங்களில், அந்தந்த மாவட்டத்தையே சொந்த ஊராக கொண்ட அதிகாரிகள் பணியில் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களின் சொந்த செல்வாக்கையோ அல்லது உள்ளூர் அரசியல் தொடர்புகளையோ பயன்படுத்தி தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இத்தகைய இடமாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மிக குறுகிய காலக்கெடுவுக்குள் இந்த மாற்றங்களைச் செய்து முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்யும் பணிகளில் தமிழக அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் முதல் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் வரை இந்தப் பணியிட மாற்றப் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



