அமெரிக்காவை அதிரவைத்த ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திற்கு இணையான ஒரு கொடூரமான குற்றச்சம்பவம், கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் அரங்கேறியது. இந்தியாவையே நிலைகுலைய வைத்த இந்த வழக்கில், தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்தர் கோலி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளும் படுகொலைகளும் இந்தியக் குற்றவியல் வரலாற்றில் ஆறாத வடுவாக இன்றும் நீடிக்கின்றன. அந்தப் பகுதியில் குழந்தைகள் தொடர்ந்து மாயமாகி வந்த நிலையில், காணாமல் போன ஒரு இளம்பெண் கடைசியாக மொகிந்தர் சிங்கின் பங்களாவிற்கு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்த வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் கால்வாயை சோதனையிட்டபோது, அங்கிருந்து மீட்கப்பட்ட மண்டையோடுகளும், சிதறிக்கிடந்த எலும்புக்கூடுகளும் ஒட்டுமொத்த நாட்டையே உறைய வைத்தது. விசாரணையில் சுரேந்தர் கோலி பல அதிர்ச்சி வாக்குமூலங்களை அளித்தான். சடலங்களுடன் உடலுறவு கொண்டது முதல், உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டது வரை விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சுரேந்தர் கோலி மற்றும் மொகிந்தர் சிங் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் இவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்தச் சட்டப் போராட்டத்தில், தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். இந்திய நீதிமன்றங்களில் மிக அரிதான மற்றும் கொடூரமான வழக்காக இது ஆவணப்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. போதிய ஆதாரங்கள் மற்றும் வலுவான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், சுரேந்தர் கோலி மற்றும் மொகிந்தர் சிங் ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. புலனாய்வுத் துறையின் தோல்வியும், வழக்கை நிரூபிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளுமே இவர்களின் விடுதலைக்குக் காரணமாக அமைந்தன. இத்தகைய கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பியது, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வேதனையையும் ஏற்படுத்தியது.



