காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள் தான். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மலர் சந்தைகள் இப்போதே ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களுக்கான தேவை உச்சத்தை தொடும் நிலையில், இத்தனை கோடி மலர்கள் எங்கிருந்து வருகின்றன? இது இறக்குமதியா அல்லது உள்நாட்டு உற்பத்தியா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உண்மை என்னவென்றால், ரோஜா உற்பத்தியில் இந்தியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குவதுடன், உலக தரத்திலான மலர்களை உற்பத்தி செய்யும் களமாகவும் மாறியுள்ளது.
இந்தியாவின் மலர் சாகுபடி வரைபடத்தில் உத்தரப்பிரதேசமும், தமிழ்நாடும் சரிநிகர் பலத்துடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்கின்றன. புள்ளி விவரங்களின்படி, உத்தரப் பிரதேசம் ஆண்டுக்கு சுமார் 66,000 மெட்ரிக் டன் ரோஜாக்களை உற்பத்தி செய்கிறது. அதேபோல், தமிழகத்தில் ஓசூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் ரோஜா சாகுபடியின் தலைநகரமாகவே திகழ்கின்றன. தட்பவெப்ப நிலை மற்றும் மண் வளம் சாதகமாக இருப்பதால், இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம் (43,000 டன்), சத்தீஸ்கர் (42,000 டன்) மற்றும் குஜராத் (41,000 டன்) ஆகிய மாநிலங்கள் ரோஜா உற்பத்தியில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன.
காதலர் தின சீசனை குறிவைத்து விவசாயிகள் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட தொடங்கி விடுகின்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் பூக்கள் அறுவடைக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, பாலிஹவுஸ் மற்றும் கிரீன்ஹவுஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெப்பநிலையை விவசாயிகள் கட்டுப்படுத்துகின்றனர்.
மளிகைப் பொருட்களை போலன்றி, ரோஜாக்கள் மிக மென்மையானவை என்பதால், பறிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவை குளிர்பதன கிடங்குகள் அல்லது மலர் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து லாரிகள் மற்றும் விமானங்கள் மூலம் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் புத்துணர்வு மாறாமல் அனுப்பப்படுகின்றன.
சாதாரண நாட்களில் ஒரு ரோஜாவின் விலை 5 முதல் 10 ரூபாயாக இருந்தாலும், பிப்ரவரி 14 அன்று அதன் தேவை அதிகரிப்பதால், விலை 20 முதல் 50 ரூபாய் வரை எகிறுகிறது. இது வெறும் வணிகம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும் கூட. இன்று ரோஜா சாகுபடி என்பது காதலர் தினத்திற்கு மட்டுமல்லாமல், திருமணங்கள், ஆன்மீக விழாக்கள் மற்றும் நறுமண திரவிய தயாரிப்பு எனப் பெரும் பொருளாதார சங்கிலியாக வளர்ந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு நீங்கள் வாங்கும் ஒரு ரோஜாவிற்கு பின்னால், இந்திய விவசாயிகளின் கடின உழைப்பும், நவீன தொழில்நுட்பமும் கலந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.



