சென்னையில் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி, அப்பாவி மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் நகை மற்றும் பரிசு ஆசை வார்த்தைகளை நம்பிய சுமார் 250-க்கும் மேற்பட்டோர், தற்போது தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சீட்டுத் தொழில் நடத்தி வந்த இந்த தம்பதியினர், மாதந்தோறும் 1,000 ரூபாய் கட்டினால் தீபாவளிக்கு தங்க நகை, பட்டுப்புடவை மற்றும் பட்டாசுகள் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி சங்கீதவாணி என்பவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 250 பேரை இதில் இணைத்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கட்டிய சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்துடன், கடந்த தீபாவளி சமயத்தில் அந்த தம்பதியினர் திடீரென தலைமறைவாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். விசாரணையில், இந்தத் தம்பதியினர் தீபாவளி சீட்டு மட்டுமின்றி ஏலச்சீட்டும் நடத்தி, ஒட்டுமொத்தமாக 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமானது.
இதையடுத்து, கைதான தினேஷ்குமார் மற்றும் புவனேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு இருந்த பெரும் கடன் சுமையை அடைப்பதற்காகவே திட்டமிட்டு இந்த சீட்டு திட்டத்தை தொடங்கி மக்களின் பணத்தைச் சுருட்டியதை ஒப்புக்கொண்டனர். வசூலித்த பணத்தை வைத்துத் தங்களது பழைய கடன்களை அடைத்ததாக கூறி போலீசாரையே அவர்கள் அதிர வைத்துள்ளனர்.
தற்போது இந்த மோசடி தம்பதியினரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை புழல் சிறையில் அடைத்துள்ளனர். “குறைந்த முதலீட்டில் அதிக லாபம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள்” என ஆசை காட்டி நடத்தப்படும் அங்கீகரிக்கப்படாத சீட்டுத் திட்டங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், பணத்தை செலுத்தும் முன் அத்தகைய நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Read More : அஷ்டமி, நவமியை காரணம் காட்டிய தேமுதிக..!! இன்னும் 3 நாள் தான் டைம்..!! தேதி குறித்த பிரேமலதா..!!



