வாயில் அடிக்கடி தோன்றி இன்னல்களை தரும் ‘ஆப்தஸ் ஸ்டோமாடிட்டிஸ்’ (Aphthous Stomatitis) எனப்படும் வாய்ப்புண் அழற்சி, இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வாய்ப்புண்ணால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இத்தகைய புண்கள் ஓரிரு வாரங்களில் தானாகவே மறைந்துவிடும் என்றாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆறாத புண்கள் ஏதோ ஒரு பெரிய உடல்நலப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொடர்ச்சியாக இருக்கும் வாய்ப்புண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு, வைரஸ் தொற்றுகள் அல்லது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் (Immunity) பலவீனமடைந்திருப்பதைக் குறிக்கலாம். சில நேரங்களில், இது ‘பெஹ்செட்’ (Behcet) எனப்படும் தீவிரமான குடல் அழற்சி நோயின் வெளிப்பாடாகவும் இருக்கக்கூடும். மிக முக்கியமாக, ஆரம்பத்தில் வலியே இல்லாமல் தோன்றும் சில வாய்ப்புண்கள் பிற்காலத்தில் வாய்ப் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே, புண்ணின் தன்மையை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், நோயாளியின் வயது, வசிப்பிடம், புகை மற்றும் மதுப் பழக்கம் போன்ற வாழ்வியல் முறைகளை கருத்தில் கொண்டே மருத்துவர்கள் இதற்கான சிகிச்சையை தீர்மானிக்கின்றனர்.
குறிப்பாக 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் ஆறாத புண்கள் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. அதேபோல், உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் பி9 (ஃபோலிக் அமிலம்) ஆகியவற்றின் குறைபாடு காரணமாகவும் அடிக்கடி வாய்ப்புண்கள் தோன்றும். வெற்றிலைப் பாக்கு போடுதல், புகையிலை மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்களுக்குப் புண்கள் ஏற்படுவது ஆபத்தின் தொடக்கமாகும். வலியுடன் கூடிய புண்களை விட, வலியே இல்லாமல் வாயில் தென்படும் மாற்றங்கள் தான் அதிக கவனத்திற்கு உரியவை.
வாய்ப்புண் என்பது வெறும் சூட்டினால் வருவது என்று அலட்சியமாக இருந்து சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது சாதாரண அழற்சியா அல்லது ஆபத்தான புற்றுநோயின் தொடக்கமா என்பதைத் தொடக்கத்திலேயே கண்டறிவது சிகிச்சையை எளிதாக்கும். எனவே, நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருந்தால், உடனடியாக உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
Read More : வாழ்வா – சாவா போராட்டத்தில் ஓபிஎஸ்..!! அரசியல் வாழ்வை தீர்மானிக்க போகும் ஐகோர்ட்..!! பிப்.16இல் தீர்ப்பு..?



