ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி என்பது ஒரு மனிதன் தன் உணர்வுகளை கடந்து இறைநிலையை உணர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்து தர்மத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மகா சிவராத்திரி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரவு முழுவதும் கண் விழித்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற விரதங்களில் உணவைத் தவிர்ப்பதற்கு (உபவாசம்) முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சிவராத்திரியில் மட்டும் ஏன் உறக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஆழமான வாழ்வியல் தத்துவம் ஒளிந்துள்ளது.
தினமும் நாம் அனுபவிக்கும் தூக்கம் என்பது ‘தாமச குணம்’ எனப்படும் மந்த நிலையின் வெளிப்பாடாகும். உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது ஐம்புலன்களும் அடங்கி மனம் ஒருநிலைப்படுகிறது. சாதாரண விழிப்பு நிலை மற்றும் உறக்க நிலை ஆகிய இரண்டையும் கடந்து, ‘துரிய நிலை’ எனப்படும் மிக உயர்ந்த விழிப்பு நிலைக்கு செல்லவே இந்த இரவு நேர வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது. உறக்கத்தை தவிர்த்து சிவ சிந்தனையில் உருகும்போது, நமது அகம் தூய்மையடைந்து இறை அருளைப் பெறுவதற்கு தகுதியான நிலையை அடைகிறது.
விரதமும் வழிபாட்டு முறையும் :
இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் முதல் நாள் ஒருவேளை மட்டும் உணவருந்தி, சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே நீராடி வழிபாட்டை தொடங்க வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி (உபவாசம்) சிவ மந்திரங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். அன்று மாலை தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறும் நான்கு கால ஜாம பூஜைகளிலும் கலந்துகொள்வது சிறந்தது. மறுநாள் காலையில் நீராடி, சிவபெருமானை தரிசித்த பின்னரே விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அன்று பகல் பொழுதில் உறங்காமல் சிவபுராணம் கேட்டோ அல்லது படித்தோ நேரத்தை கழிப்பது நற்பலன்களைத் தரும்.
கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்..?
வேலை சூழல் அல்லது உடல்நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சிவபெருமானின் திருவுருவப் படத்திற்கு முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபடலாம். ‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை மனதார உச்சரிப்பதும், சிவனை நினைத்து தியானிப்பதும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு இணையான பலன்களைத் தரும் என்பது ஐதீகம். புலன்களை கட்டுப்படுத்தி, மனதை இறைவனிடம் ஒப்படைக்கும் இந்த உன்னத நாளில் சிவ தரிசனம் காண்பது, நினைத்த காரியங்களை நிறைவேற்றும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
Read More : தங்க நகைகளை ஏன் ‘பிங்க்’ நிற பேப்பரில் சுற்றித் தருகிறார்கள்..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய பின்னணி..!!



