தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் இறுதியில் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் இதற்கான தேதிகளை அறிவிக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், இதுவரை மௌனம் காத்து வந்த தேமுதிக, மீண்டும் அதிமுக முகாமுக்கே திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தேமுதிக தரப்பு திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பன் அண்மையில் தேமுதிகவைச் சிறுமைப்படுத்தும் விதமாகப் பேசியது, அந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. “தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா?” என அவர் எழுப்பிய விமர்சனம், தேமுதிக தொண்டர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கிய நிலையில், திமுக கூட்டணியில் இணைய இருந்த மிகக் குறைந்த வாய்ப்பும் தற்போது மங்கிப்போய்விட்டது.
இந்த அரசியல் பின்னணியில்தான், பிப்ரவரி 15 அன்று கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்துப் பேசினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இதேபோன்ற ஒரு மகா சிவராத்திரி நிகழ்வில்தான் இருவருக்குள்ளும் கூட்டணி ஒப்பந்தம் உறுதியானது. அந்த சென்டிமென்ட் தற்போதும் தொடர்வதால், அதிமுக – தேமுதிக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஓபிஎஸ் மற்றும் சசிகலா போன்றோர் இன்னும் எந்தப் பக்கம் செல்வார்கள் என்பது தெரியாத நிலையில், தேமுதிகவைச் சேர்த்துக்கொள்வது எடப்பாடிக்கு கூடுதல் பலத்தைத் தரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் புதன்கிழமை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாக தெரிகிறது.



