தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா தான். அங்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு, வெறும் மரியாதை நிமித்தமானது அல்ல என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்த சந்திப்பில், தேமுதிகவுக்கு 8 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு இந்த நகர்வு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



