ஒருவர் தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கோயில்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது கட்டாயமாக மதச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீட்டில் விளக்கேற்றுவது போன்ற எளிய ஆன்மிக நடைமுறைகள்கூட ஒருவரின் நம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாகக் கருதப்படலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். சபரிமலை கோயில் பெண்கள் நுழைவு விவகாரம் உள்ளிட்ட மத சுதந்திரம் தொடர்பான பல்வேறு மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமர்வில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி வராலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விசாரணையின் போது, வழக்கறிஞர் டாக்டர் ஜி. மோகன் கோபால் சமூக நீதிக்கான கோரிக்கைகள் மத சமூகங்களுக்குள்ளிருந்தே உருவாகின்றன என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, “இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை என்பதால், ஒருவர் கட்டாயமாக கோயிலுக்குச் செல்ல வேண்டும் அல்லது சடங்குகளை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை” என்று தெரிவித்தார். மேலும், ஒருவர் தனது குடிசையில் ஒரு விளக்கை ஏற்றினாலே அது அவரின் மத நம்பிக்கையின் வெளிப்பாடாக கருதப்படலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தனிநபர்கள் ஒவ்வொரு மத நடைமுறையையும் அல்லது மதம் சார்ந்த விஷயங்களையும் ஒரு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் கேள்வி கேட்கத் தொடங்கினால், நூற்றுக்கணக்கான மனுக்கள் குவியும் என்றும், இதன் காரணமாக ஒவ்வொரு மதமும் உடைந்துவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்து மத நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, செப்டம்பர் 2018-ல் 4:1 பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்திருந்த தடையை நீக்கியது.
Read more: NEET முதல் JEE வரை.. தேர்வு வினாத்தாள்களை கசியவிட்டால் இந்தியாவில் என்ன தண்டனை..?



